தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்), பாரத் பெட்ரோலியம், நெய்வேலி அனல் மின் நிலையம், திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி – சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது. தமிழர்கள் தொடர்ந்து திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் இந்திய அரசின் இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து இயங்கி வரும் மத்தியரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழர் குடிகள் சார்பாக கோரிக்கையயை உங்களிடம் முன் வைக்கிறோம்.
அரியானா மாநில மண்ணின் மக்களுக்கே தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வலியுறுத்தும் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது என அம்மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் 06-ஜூலை-2020 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேச மக்களுக்கு மட்டுமே மாநில அரசுப் பணிகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். மேலும், சிவராஜ் செளஹான், "மத்திய பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச அரசு பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம். மத்திய பிரதேச வளம், மத்திய பிரதேச குழந்தைகளுக்கே," என்று 18-ஆகஸ்ட்-2020 அன்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குசராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆந்திரம் முழுவதுமுள்ள தனியார் தொழிற்சாலை/ நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75% சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதாவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 20-ஜூலை-2020 அன்று சட்ட மசோதவை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்று, உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழர் குடிகள் சார்பில் மிகத்தாழ்மையுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கு வழங்கும் வகையில், “தமிழர் வேலைவாய்ப்பு நலவாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு தமிழர் குடிகள் சார்பாக கோரிக்கையயை முன் வைக்கிறோம்.
பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசாங்க வேலைகளில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்றப்பட்டு வருவதை கண்கூடாய் காண்கிறோம். இதன் மூலம் அந்தந்த மாநிலத்து மக்களுக்கு மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதையும் அவரிகளின் உணர்வுக்கு, வாழ்வாதார அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அம்மாநில அரசுகள் முடிவு செய்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் இவ்வாரான ஒரு முடிவை முதல்வர் எடப்பாடியார் அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் பொது விருப்பமாகவும், கோரிக்கையாகவும் தற்போது எழுந்து வருகிறது.
ஆகையால் தமிழக அரசு கீழ்கண்ட தமிழர்களின் கோரிக்கையை பரிசீலித்து செயல்படுத்த தமிழர் குடிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்:
கோரிக்கைகள்:
1. தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் 90 சதவிகித வேலை தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்
2. தமிழ்நாட்டில் அமைந்து இருக்கும், அமைய இருக்கும் தனியார் நிறுவனங்களில் 75 சதவிகித வேலை தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாட்டில் மக்களின் விவசாய வீடு நிலங்களின் மீது அமைந்து இருக்கும், அமைய இருக்கும் நிறுவனங்களில் 100 சதவிகித வேலை அந்த நிலத்தின் உரிமையாளர்க்கும், அது சாத்தியப்படாது நிலையில் அந்த வேலை தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
4. இங்கு தமிழர் என்று அடையாளப்படுத்த அவர்களின் தமிழ் சாதி/குடி அடையாளம், மற்றும் தாய் மொழி தமிழாக இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
5. தமிழர்களுக்கே வேலை வழங்கும் வகையில், “தமிழர்கள் வேலைவாய்ப்பு நலவாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.
இப்படியான ஒரு திட்டத்தை நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், மக்களின் பேராதரவும் நன்றிகளும் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் வரும். இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகவும், தமிழர்களுக்கும் அவர்களின் வருங்கால சந்ததிகளுக்கும் ஒரு மிகப்பெரிய பயனுள்ள திட்டமாகவும் அமையும். மேலும் தற்போதைய கொரோன காலத்தில் பலரும் தமிழ் நாட்டில் வேலையற்று இருக்கும் பட்சத்தில், இப்படியான ஒரு திட்டம் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பலரின் வாழ்வாதாரத்தை மேம்படும் ஒரு மகத்தான திட்டமாக அமையும் என தமிழர் குடிகள் சார்பாக கூறிக்கொள்கிறோம்.
நன்றி !!!
தமிழர் குடிகள்
Your email address will not be published. Required fields are marked *